Friday 13 January 2012

வெற்றிலை - A to Z




                    நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை.


                   கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. இது வெற்று இலை அல்ல. இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை.  

துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை.
                  
                      வெற்றிலையின் காம்பைக்கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பிக்கப்படுகிறது. தேவியின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண்மை ! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தியின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண்மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாததுபோல் வெற்றிலையின்றி வழிபாடு இல்லை.

                            திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என்கிறார்கள். வெற்றிலைபாக்கு கொடுத்துவிட்டால் அது தாம்பூல சத்தியம். பிறகு அதை யாரும் மீறத் துணிய மாட்டார்கள், முற்காலத்தில். சிரார்த்தம் செய்யும் போதும் மற்ற சடங்குகளின் போதும் தானம் கொடுப்பவர்கள் வெற்றிலை பாக்கின் மீது உத்திரணியால் நீர் வார்த்துக் கொடுப்பது வழக்கம். வடஇந்தியாவிலும் இந்த வழக்கம் பரவலாக இருக்கிறது. வடநாட்டவர்கள், தீபாவளியன்று லக்ஷ்மி பூஜை செய்யும் போது மூன்று வெற்றிலையையும், மூன்று பாக்கையும் பூசாரி எடுத்துவைப்பார். லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்காவை இது குறிக்குமாம். மாங்கல்யதாரணம் முடிந்ததும் வந்தோரனைவரும் வாழ்த்திவிட்டு விருத்துண்டு விட்டுப் புறப்படுகையில் முகூர்த்த வெற்றிலைபாக்கு கொடுக்காமல் அனுப்பமாட்டார்கள். திருமணத்தின்போது கணவன் மனைவி இருவருக்கும் பெண்ணின் சகோதரன் தாம்பூலம் மடித்துக் கொடுப்பது ஒரு சம்பிரதாயம். நலங்கின்போதும், முதல் இரவின் போதும் வெற்றிலை பாக்குக்கு முக்கிய இடம் உண்டு.

                        கம்பராமாயணத்தில் ஒரு உருக்கமானகட்டம். ராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதை. இளம் வெற்றிலையை  யார் மடித்து வாயில் போட ராமன் உண்பான் என்று வருந்தினாளாம்.

                              தருமன் ராஜசூய யாகம் நடத்திய போது முதல் தாம் பூலத்தை கண்ணன் பெற்றுக் கொண்டான் என்று மகாபாரதம் சொல்கிறது.

                                         திவ்ய பிரபந்தத்தில் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் எம்பெருமான் என்றென்றே கண்களில் நீர்மல்கி என்று மனம் உருகிப்பாடுகிறார் நம்மாழ்வார்.

                                         காளமேகப்புலவர் ஆதி நாளில் திருவானைக்கா கோயிலில் பரிசாரகராக இருந்தாராம். அங்கே தாசியாக இருந்த மோகனாங்கி என்பவளின் அழகில் மயங்கி ஒருநாள், கோயில் பிரகாரத்திலேயே அவள் வருகைக்காக காத்திருந்த நிலையில் கண்ணயர்ந்தார். நள்ளிரவில் அகிலாண்டநாயகி அம்மன் அவர் முன் தோன்றி, தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவர் வாயில் உமிழ்ந்தாளாம், அவர் அதைச் சுவைக்க, தெய்வப் பிரசாதமான தாம்பூலம் நாவில் பட்டதும் நாவன்மை பெற்ற காளமேகம், ஆசுகவி பாடுவதில் வல்லவரானாராம்.

                             இதுபோன்றே, கூத்தனூரில் தேவி சரஸ்வதி தன் வாய்த்தாம் பூலத்தின் சாறை அளித்து ஒட்டக்கூத்தரை கவி வித்தகர் ஆக்கியதாகவும் ஒரு வரலாறு உண்டு.

                                வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, சுபிட்சத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.
               
                      வெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.

வெற்றிலையை உபயோகிக்கும் முறை
வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.
வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது.  இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது.  கலோரி அளவு 44.
தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.   வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல்  நீங்கும்.  நன்கு பசி உண்டாகும்.  வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு.  பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை  நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
நுரையீரல் பலப்பட
வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி  வருவது நல்லது.
வயிற்றுவலி நீங்க
2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து,  5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில்  அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.  மாந்தம் குறையும்.
சர்க்கரையின் அளவு கட்டுப்பட
வெற்றிலை – 4
வேப்பிலை ஒரு கைப்பிடி
அருகம் புல் ஒரு கைப்பிடி
சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.
விஷக்கடி குணமாக
உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும்.  சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.
இருமல் குறைய
வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.
அஜீரணக் கோளாறு அகல
வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5  நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும்.   வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
தோல் வியாதிக்கு
100 மி.லி. தேங்காய் எண்ணெயில்  5 வெற்றிலையை  போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு  சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.
தலைவலி நீங்க
வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு.  மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து  கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.
தீப்புண் ஆற
தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.
பிற உபயோகங்கள்
· வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.
· வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.
· தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும்.
· இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.
· புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.
· வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.

No comments:

Post a Comment