Saturday 18 February 2012

சிவராத்திரியா அப்படின்னா....?


          
              நீயெல்லாம் ஒரு துரும்புக்கு சமம், தெரிஞ்சுக்கோன்னு இயற்கை நம்மளை புரட்டிப் போடுறதுக்கு ஒரு நிமிஷம் ஆகாது.. ஆனாலும், "விடாப் பிடியா, நாமளும் வாழ்ந்து காட்டுவோம்"ன்னு இருக்கிறோம்... எல்லோருமே ஜெயிச்சுக் காட்டணும்னு தான் போராடுறாங்க...என்னாலே முடியலையா, என் பசங்களாவது ஜெயிக்கணும்னு முயற்சி பண்ணுறாங்க...


எதுக்கு...?
ஒரு நாலு பேரு நம்மளைப் பத்தி நாலு வார்த்தை நல்ல விதமா பேசணும்னு... அம்புட்டுதான்... அந்த நாலு பேரு, நம்ம அம்மா அப்பா , மனைவி, குழந்தையா இருக்கலாம்... இல்லை, காசு கூட வாங்காம, நம்மளை கடைசியா தூக்கிட்டுப் போறவங்களா கூட இருக்கலாம்..
கூட்டிக் கழிச்சுப் பார்த்தா , மனுஷன்னு இல்லை எந்த ஒரு ஜீவனுமே ஏங்குகிறது, பாசத்துக்கும், அங்கீகாரத்துக்காகவும்தான்.  நீங்க வீட்டுல வளர்க்கிற ஒரு பூச்செடியில இருந்து, நாய்க் குட்டி வரைக்கும்.... இதுங்களே இப்படின்னா? அப்போ மனுஷனா பிறந்த நாம?

தட்டிக் குடுத்து வேலை வாங்குறயா... உசுரைக் கொடுத்து வேலை பாப்போம்யா... .... மவனே தட்டி வேலை வாங்கினே...? சமயம் பார்த்து காலை வாருறது மட்டுமா... முதுகுலே கூட குத்தி தூக்கிப் போடுவோம்லே... நாங்கள்லாம் யாரு..?


சிங்கம்டா...... சிங்கம்.... இதுதான் மனிதன். அது உங்க கம்பெனி MD யா இருந்தாலும் , இல்லை உங்க வீட்டு கழிவறையை சுத்தம் பண்றதுக்கு வர்ற ஆளா இருந்தாலும்....

எதுக்காக நாம ஆளுக்கு ஏத்தமாதிரி, நம்ம மனசு சொல்றமாதிரி மத்த ஜீவ ராசிகளை ஏத்த இறக்கமா பார்க்கிறோம்னு தெரியலை.... நம்ம மனசு சொல்றதையும் மீறி, எச்சரிக்கை பண்றதையும் மீறி எவ்வளவோ விஷயங்களை செய்றோம்... ஆனா, ஜாதி, மதம் , அற்ப ஜீவ ராசிகள்னு ஏன் ஒரு பாகு பாடு நமக்கு ....?
நாம அவங்க நிலைமைல இருந்தா.. இதே மாதிரி ஒரு மதிப்பு நமக்கு கிடைச்சா.., நாம தாங்கிக் கொள்ளும் பக்குவத்தில இருக்கிறோமா? நிச்சயமா இல்ல. அப்போ, நாம ஓரளவுக்கு நல்ல நிலைலே இருக்கிறோம்... இது இயற்கையோ, கடவுளோ நமக்கு கொடுத்த பிச்சை. இந்த நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டாமாஎல்லோரையும் மதிக்க தொடங்குவோம்...
இயற்கை நம்மளை படைச்சதே அதுக்குத்தான்...  அதன் பிறகு நாம இயற்கையை மதிக்க தொடங்குவோம். ஆமா, கடவுளைத் தான்.....

கடவுள் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்க செய்வது , இந்த சிவ ராத்திரி நன்னாள்.

சிவ ராத்திரியில் வேறு என்ன விசேஷம்..?

நமது தேசத்தில் எண்ணற்ற கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு
கொண்டாட்டங்களுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. உலக அளவில் பல்வேறு விழாக்கள் இருந்தாலும் நமது நாட்டில் கொண்டாடப்படும் விழாக்களின் பின்புலத்தில் எப்பொழுதும் மெய்ஞான காரணம் இருக்கத்தான் செய்கிறது.


எளிய மக்களுக்கு மெய்ஞான கருத்துக்கள் புரிவதில்லை என்பதால் அவர்களுக்கு விளக்கவும், சுவாரசியமாக இருக்கவும் கதைகள் மூலம் அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தினார்கள். மெய்ஞான கருத்தை அறிய முடியாத சிலர், அறியாமையில் இருக்கும் மக்களுக்கு சொல்லப்பட்ட கதைகளை பிடித்து தொங்குகிறார்கள். இங்கே மெய்ஞான கருத்து என குறிப்பிடுவது சாஸ்திர ரீதியான தன்மைகளை. விஞ்ஞானத்தை அல்ல.

மனித உடல் இயற்கையானது. மனிதனின் மனம் மற்றும் செயல்களும் இயற்கையை ஒட்டியே செயல்படுகிறது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என கேள்வி பட்டிருப்பீர்கள். அது போல பிரபஞ்சத்தில் என்ன நிகவுகள் இருந்தாலும் அந்த நிகழ்வு நமக்குள்ளும் நடக்கும்.

பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியில் நடக்கும் நிகழ்வு தனிமனிதனுக்கு உள்ளும்
நடைபெறும். வேண்டுமானால் காலங்கள் வேறுபடலாம். ஆனால் கண்டிப்பாக நடைபெறும்.

மனிதன் பூமியில் வாழ்வதால், பூமி - சந்திரன் - சூரியன் எனும் இந்த மூன்று
பிரபஞ்ச பொருட்களும் மனித வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படுத்துகிறது.
முப்பரிமாண நிலையில் பூமி-சந்திரன்-சூரியன் ஆகிய கிரகங்கள் மனிதனுக்கு முறையே உடல், மனம் மற்றும் ஆன்மா எனும் நிலையில் செயல்படுகிறது.

பூமியில் இருக்கும் நெருப்பு- காற்று -நீர் - மண் மூலம் நமது உடல் வளர்ச்சி
அடைகிறது.


உடலுக்கு பூமியே ஆதாரம். சூரியன் ஆன்மாவிற்கு ஆதாரம் என கூறலாம். காரணம் அது சுயமாக பிரகாசிக்கிறது. சந்திரன் தனது நிலையற்ற தன்மையால் மனதை குறிக்கிறார்.

பிரபஞ்ச நிலைக்கும் மனித உடலுக்கும் இருக்கும் தொடர்பை அறிந்த ரிஷிகள், கிரகநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப மனிதனை செயல்படுமாறு வழிநடத்தினார்கள். இந்த வழிமுறையை ஜோதிடம் என்கிறோம்.

மனிதனின் செயல்கள் இரு நிலையில் செயல்படுகிறது. ஒன்று உள் முகமாக, மற்றது வெளிமுகமாக. தியானம், யோக பயிற்சி மூலம் உள்முகமாகவும், உணர்வு-செயல் மூலம் வெளிமுகமாகவும் இருக்கலாம். மனிதர்கள் அதிக சதவிகிதம் வெளிமுகமாகவே இருப்பார்கள்.

மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான். சூரிய மண்டலத்தில் ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.


 அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக நிகழ்வுகளில் அமைகிறது. இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியும் இன்றி உள்முகமாகிறான். இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.

மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில் ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த கொண்டாட்டங்கள். ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமியை கவனியுங்கள், சித்திரா பெளர்ணமி - வைகாசி விசாகம் என
அனைத்து பெளர்ணமியும் ஏதோ இரு விசேஷ தினமாக கூறி அன்று கோவிலுக்கு செல்லும் சூழலை அமைத்தார்கள்.


ஆனால் இன்று நடப்பதோ வேறு பெளர்ணமி நல்ல நாள் என திருமணம்,
தொழில் துவங்குதல் என வெளிமுகமான விஷயங்களை மக்கள் செய்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது.

 அமாவாசை, பெளர்ணமியில் ஏற்படும் நிகழ்வுகள் போன்று பிற நாட்களிலும் சூரியன் சந்திரன் பூமியின் நிலை மனிதனை உள்முகமாக செயல்படுத்தும் நிலை ஏற்பட்டால் அன்றும் மனிதன் உள்முகமாக இருக்க முயல வேண்டும். மாதா மாதம் வரும் ஏகாதசி, திரயோதசி காலங்கள்.


வருடத்தில் வரும் கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி தினங்கள் ஆகியவை மனிதனை உள்முகமாக்க தன்னிச்சையாக செயல்படும்.

ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான் தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். சூரியன் (கும்பத்தில் இருந்து - சிம்ம ராசியையும், சந்திரன் மகரத்தில் இருந்து - கடக ராசியையும் பார்க்க விருக்கின்றனர்).


யோக சாஸ்திர ரீதியாக சூரியன் மற்றும் சந்திரன் இடது , வலது நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய தினம் ஏற்படும். நாம் சுவாசிக்கும்போது, மூக்கின் இரண்டு துவாரங்களில் - ஒவ்வொரு குறிப்பீட்ட நேரத்துக்கும், ஒரு துவாரம் வழியாகவே , காற்று - போகவும் முடியும், வெளியேறவும் முடியும். சிறிது நேரம் கழித்து , அது மாறும். உங்கள் மூக்கின் ஒரு துவாரத்தை அடைத்து , கவனித்துப் பாருங்கள். இதன் பின் மிகப் பெரிய சூட்சுமம் இருப்பதை, நம் சித்தர் பெருமக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர்.

சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் , மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும் மாற்றம் அடையும்.


அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை
இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.

உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது.


இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சிவ எனும் சொல் அழகு அல்லது இயற்கை என்றும் பொருள்படும். அன்று இரவு உன்னதமான இயற்கை நிலையை காண உடல் தயார் நிலையில் இருப்பதால் சிவ ராத்திரி என அழைக்கப்படுகிறது.

சூரியன் சந்திரன் பூமி என்பது தனி ஒரு மனிதனுக்கோ, மதத்திற்கு செயல்படுவதில்லை. அதுபோலவே மஹாசிவராத்தரி இந்துக்கள்பண்டிகை அல்ல.

ஆன்மாவிற்கான கொண்டாட்டங்கள்.
ஆன்மாவில் கொண்டாடுங்கள்.
ஆன்மாவாய் கொண்டாடுங்கள்.

ஆன்மாவை உணர இன்றைய நாளை பயன்படுத்தி ஆன்மீகனாகுங்கள்.




பினிஷிங் டச்   :

கடவுள்னு ஒருத்தர் நிஜமாவே இருக்காரா? அப்படியே இருந்தா, அவரு ஏன் இப்படி இருக்கணும்? ஒருத்தர்  தலைல பாம்பு வைச்சுக்கிட்டு இருக்காரு. ஒருத்தர் அதுல படுத்து இருக்காரு. ஒருத்தர் அதை இடுப்புல கட்டிக்கிட்டு இருக்காரு.ஒருத்தர் யானை முகம் வைச்சு இருக்காரு. எலியாம், புலியாம், காளை மாடாம் , மயிலாம்... இதுல எல்லாம் தான் அவங்க வருவாங்களாம்...

ஒவ்வொருவருக்கும் ஒரு நூறு கதை வைச்சு இருக்கிறாங்க..... எதைக்  கேட்டாலும் ஒரு விளக்கம்...  விளக்கம் இல்லைன்னு நினைச்சா, ஏண்டா இப்படி பய பக்தி இல்லாம பேசுற..? சாமி கண்ணைக் குத்திடும்ங்கிற சின்னப் புள்ளைத்தனமான  பயமுறுத்தல் வேற.

அட, பின்னே என்ன சார்.... ! நியாயம் தானேன்னு தோணுதா..?

நம்ம இந்து மதம்ங்கிறது, எத்தனையோ ஆயிரக்கணக்கான வருடங்கள் , ஏன் கோடிக்கணக்கான வருடங்கள் முன்னாலே கூட தோன்றியதா இருக்கலாம்... யுகம், யுகமா தொடர்ந்து வருது.. எல்லாம் உண்மையா கூட இருக்கலாம். இல்லை, கோடிக்கணக்கான திரிபு நடந்து இருக்கலாம். நாம அதை ஆராய்ச்சி பண்ணி என்ன பண்ணப் போறோம்?

எல்லாத்தையும், தூக்கி தூரப் போட்டுட்டு, முதல்ல நாம யாருங்கிறதை கண்டுபிடிங்க... நம்மோட பூர்வ ஜென்மத்தை பொறுத்துத் தான் இந்த ஜென்மம் ... இந்த ஜென்மம் எப்படிங்கிறதை வைச்சுத்தான், அடுத்த ஜென்மம்... இதை நாம எல்லோரும், வாழ்க்கையிலே எப்போவோ ஒரு தடவையாவது, உணர்ந்து இருப்போம்....

சம்பந்தமே இல்லாம யாரோ ஒருத்தரை, முதன் முதலா பார்க்கும்போதே ஒரு ஈர்ப்பு வரும்... இன்னொருத்தர் , நிஜமாவே நல்லவரா இருப்பார்..... ஆனா, அவரைப் பார்த்தாலே ஆத்திரம், ஆத்திரமா வரலாம்....

நீங்க பிறந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டுல பிறந்த ஒருத்தர், சொத்து , சுகம்னு ஓகோன்னு இருக்கலாம். இந்த பக்கத்து வீட்டுல பிறந்தவர் , உங்களை விட மோசமான நிலைல இருக்கலாம்....

ஊரு, உலகத்துல - எத்தனையோ நாடு இருக்குது, ஊரு இருக்குது.. எல்லாத்தையும் விட்டுட்டு நம்ம ஊர்ல - நம்ம வீட்டுல வந்து ஏன் பிறந்து இருக்கணும்? எங்கே இருந்து வர்றோம்.. பெரிய பெரிய ஆளுங்க சொல்ற மாதிரி - அழிவு உடலுக்கு மட்டும் தானோ..? ஆதமா அப்படின்னு ஒன்னு இருக்கோ..? அது தான் நாமோ..?

ஊர் உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்.. உங்க வீட்டுக்கார அம்மணி எங்கேயோ பிறந்து - வளர்ந்து எப்படியோ உங்க வாழ்க்கை முழுக்க கூட இருக்கிறாங்களே, இது எல்லாம் எப்படி...?

இது எல்லாம் தான், நம் பூர்வ புண்ணிய வினைகள், மற்றும் இந்த ஜென்ம வினைகள் தீர்மானிக்கிற விஷயங்கள்....

வேலை வெட்டி இல்லைன்னா... என்ன எதுன்னு சிந்திச்சுப் பாருங்க...

இல்லை, நிறைய வேலை இருக்கு, சாதிக்கணும்னு நினைச்சா... இந்த மாதிரி வர்ற அபூர்வ நாட்களை , பயன் படுத்திக்கோங்க.... நிஜமாகவே உங்கள் முயற்சிகள் கைகூடும்.

வெகு சீக்கிரம் என்பது தான் இங்கு முக்கிய விஷயம்.... இந்த விரத மகிமை.

அது , ஏன்.. எப்படின்னு எல்லாம், நமக்கு தெரியாதுங்க... நானும் உங்களை மாதிரி சாதாரண ஆளுதான்... தெரிய வந்தா கண்டிப்பா சொல்றேன்...


திங்கள் கிழமை - திருவோணம் நட்சத்திரம் (சந்திரனுக்குரிய நட்சத்திரம்) இணைந்து வரும் மகா சிவராத்திரி இது. குரு மகராஜ் ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர் பிறந்த நாளும் இணைந்து வருகிறது....!


தவறாமல், அந்த சிவத்தை சிந்தனை செய்யுங்கள்... மனமுருக வேண்டுங்கள்.... உங்கள் வாழ்க்கை அமோகமாக மாறுவது நூற்றுக்கு நூறு உறுதி..!

ஓம் சிவ சிவ ஓம்...!


1 comment: