Tuesday 31 January 2012

இந்து மதத்தின் செங்கற்கள்......


பதினெண் புராணங்கள் என்னென்ன?
பஞ்ச புராணங்கள் என்று எதுவும் நமது சம்பிரதாயத்தில் இல்லை. புது சிந்தனையாளர்களின் கண்ணோட்டமாக இருக்கலாம். அதுபற்றிக் கூறியவர்களே அதற்கு சான்று. பதினெட்டு புராணங்கள் உண்டு. அதை மத்ஸ்ய புராணம், மார்க்கண்டேய புராணம், பாகவத புராணம், பவிஷ்ய புராணம், பிரம்மவைவர்த்த புராணம், பிரம்மாண்ட புராணம், பிரம்ம புராணம், வராஹ புராணம், வாமன புராணம், விஷ்ணு புராணம், வாயு புராணம், அக்னி புராணம், நாரதீய புராணம், பத்ம புராணம், லிங்க புராணம், கருட புராணம், கூர்ம புராணம், ஸ்கந்த புராணம் ஆகியன. இதை தவிர உப காரணங்களும் உண்டு. அவை; சனத்குமார புராணம், நரஸிம்ஹ புராணம், சிவ புராணம், பிரஹன்னாரதீய புராணம், துர்வாச புராணம், கபில புராணம், மானவ புராணம், ஒளசஸை புராணம், வருண புராணம், ஆதித்யபுராணம், மஹேச்வர புராணம், பார்கவ புராணம், வசிஷ்ட புராணம், காலிகா புராணம், சாம்ப புராணம், நந்திகேச்வர புராணம், ஸெளர புராணம், பராசர புராணம். இப்படி 18ல் முடிவடையும் புராணங்கள் புழக்கத்தில் உண்டு. ஐந்து எண்ணிக்கையில் முடிவடையும் புராணத் தகவல் தென்படவில்லை!
புராணங்கள் - 18, உப புராணங்கள் - 18, வித்யைகள் 18, அதேபோல் மகாபாரதம் 18 பர்வாக்களை உள்ளடக்கியது. பாரதப்போர் 18 நாட்கள் நடந்தது. படைகளும் 18 அஷெளஹணியாக இருந்தன. பகவத்கீதையும் 18 அத்தியாயங்கள் கொண்டது. ஆக 18 எனும் சிறப்புடன் அமைந்த புராண எண்ணிக்கையில் பஞ்ச புராணம் என்றொரு வழக்கத்தை தோற்றுவிப்பது விளையாட்டு.

சிவபூஜையில் கரடி என்றால் என்ன?
பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் தெரியுமா?
திருமணத்தின் தாலி கட்டும் போது,
மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!! - என்று சொல்கிறார்கள். மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத் துணைவியாக, என் சுக துக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக! என்பது இதற்குப் பொருள்.

சம்பந்தரின் வாழ்த்து பெற்ற நாயன்மார்கள்
திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் சிவனை பாடிய தலங்கள், பாடல் பெற்ற சிவத்தலங்கள் என அழைக்கப்படுகின்றன. 274தலங்கள் இவ்வாறு பாடல் பெற்றுள்ளன. இதில் திருஞானசம்பந்தர் நாயன்மார்களில் இருவரைப் பற்றி பாடியிருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டியன் நெடுமாறன், சமண சமயத்தை பின்பற்றினார். அவரை சைவ சமயத்தை பின்பற்றச்செய்வதற்காக, அவரது மனைவி மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் இருவரும் திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரும்படி அழைத்தனர். சம்பந்தரும் மதுரை வந்தார். அவரை குலச்சிறையார் வரவேற்றார். முதலில் திருவாலவாய் கோயிலை தரிசித்த திருஞானசம்பந்தர், மங்கையர்கரசியாரையும், அவரது அமைச்சர் குலச்சிறையாரையும் சிறப்பித்து சொல்லும் வகையில் மங்கையர்க்கரசி வலவர்கோன் பாவை என்னும் பதிகத்தை பாடினார். திருஞானசம்பந்தரால் வாழ்த்தப்பட்ட இவர்கள் இருவரும் சிவனருள் பெற்று நாயன்மார் வரிசையில் இணைந்தனர். குலச்சிறை நாயனாரை சுந்தரமூர்த்தி, ஒட்டக்கூத்தர் இருவரும் பெருநம்பி குலச்சிறையார் என்று பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவராத்திரியும் பெருமாளும்
பெருமாளுக்கும் சிவராத்திரிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறது என்றால் இருக்கிறது. நரகாசுரன் கொல்லப்பட்ட தேய்பிறை சதுர்த்தசி திதியே ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. பகவான் கிருஷ்ணன் ஐப்பசி மாத சிவராத்திரி முழுவதும் விழித்திருந்து அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னால் நரகாசுரனைக் கொன்றார். இதில் இருந்து சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்குவோர் எடுத்த செயலில் வெற்றி பெறுவர் என்பது தெளிவாகிறது.

கோமாதா பூஜை
கோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும். பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும். எனவேதான், அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.

திருநீறில் மருந்திருக்கு
திருநீற்றின் பெருமை அளவிடற்கரியது. நீறில்லா நெற்றி பாழ் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். பாண்டிய மன்னனின் வெப்பு நோய் நீங்குவதற்காக திருஞான சம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார். சுத்தமான திருநீறு, வாதத்தினால் உண்டாகும் 81 நோய்களையும் பித்தத்தினால் உண்டாகும் 64 நோய்களையும், கபத்தால் உண்டாகும் 215 நோய்களையும் போக்கும் தன்மை கொண்டது.

இறைவனுக்கு ஆடை
சிவனுக்கு எந்த நேரமாக இருந்தாலும் வெள்ளை பட்டு அணிவிக்க வேண்டும். ஆனால், அம்மனுக்கு காலையில் சிவப்பு பட்டும், மாலையில் நீலம் அல்லது பச்சை பட்டும், அர்த்த ஜாமத்தில் சிவப்பு அல்லது பச்சை கரையுள்ள வெள்ளை பட்டும் சார்த்த வேண்டும்.


ஷண்முகி முத்திரை
நதிகள் அல்லது கடலில் முழ்கி குளிக்கும் போது காதுகளை பெரு விரல்களாலும், மூக்கின் இரு பக்கங்களை நடுவிரல்களால் மூடிக் கொண்டும், கண்களை ஆள்காட்டி விரலால் திறந்து கொண்டும் தெய்வத்தை நினைத்துக் கொண்டு நீராட வேண்டும். இந்த முத்திரைக்கு ஷண்முகி முத்திரை என்று பெயர்.

கும்பிடக்கூடாத நேரம்
கோயில்களில் சில நேரங்களில் சுவாமியை வணங்கக்கூடாது. உற்சவ காலங்களில் சுவாமி புறப்பட்டு வீதி உலாவரும்போது கோயிலில் உள்ள மூலவரையும் பரிவார தெய்வங்களையும் வணங்கக்கூடாது. அபிஷேகம் ஆகும் போதும், நைவேத்யம் தருவதற்காக திரட்டியிருக்கும் போதும் சுவாமியை வணங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பிரசாதத்துக்காக அடித்துக் கொள்ளாதீர்கள்
இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை சிறிதளவாவது நாம் உண்ண வேண்டும். சிலர் பிரசாதம் வேண்டொமெனச் சொல்வதும், பெரும்பாலான இடங்களில் பிரசாதத்துக்காக சண்டைபோட்டுக் கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டும். பிரசாதத்துக்கென தனி மரியாதை இருக்கிறது. தெய்வங்கள் மனிதனைப் போல் நேரடியாக உணவை ஏற்பதில்லை. அவற்றின் பார்வை மட்டுமே அதில்படுகிறது. இதை சமஸ்கிருதத்தில் திருஷ்டி போக் என்பர். கண்ணொளி பட்டது என்பது இதன் பொருள். தெய்வத்தின் கண்ணொளி பட்ட பொருள் புனிதத்தன்மை பெறுகிறது. இதைச் சாப்பிடுபவர்கள் மனம் தூய்மையடைகிறது. உள்ளத்தில் பக்தியை உருவாக்குகிறது. எனவே, பிரசாதம் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வரிசையில் நின்று, உரிய மரியாதைகளுடன் பெற்றுச் செல்ல வேண்டும். பிரசாதத்தை பகிர்ந்து சாப்பிடும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்ணைப் பெற்றால் மோட்சம்
பெண் குழந்தை என்றாலே ஓடிப்போகிறார்கள் பெற்றவர்கள். காரணம், அவளைத் திருமணம் செய்து கொடுக்க பெரும் பொருள் சம்பாதிக்க வேண்டியிருக்கிறதே என்ற பயத்தால். ஆனால், பெண்ணைப் பெற்று சிரமப்பட்டு கல்யாணம் செய்து வைப்பவர்களுக்கு மோட்சம் நிச்சயம் கிடைக்கும். திருமணத்தின் போது, பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்கும் போது, புரோகிதர் ஒரு மந்திரம் சொல்வார். அதன் பொருள் என்ன தெரியுமா?
மகளே! நீ எப்போதும் என் எதிரில் காட்சி தருவாயாக! நீ அம்பிகையின் அருள் பெற்ற உத்தமி. உன் இருபுறத்திலும் அந்த அம்பிகை காட்சியளிக்கிறாள். நீ எனக்கு எல்லாவகையிலும் பெருமையைக் கொடு. மிகச்சிறந்தவனான இந்த மணமகனுக்கு நான் உன்னை தானம் அளிப்பதால், நான் நற்கதியை அடைவேன். மோட்சத்தை உன் மூலமாகப் பெறும் பாக்கியசாலியாகத் திகழ்கிறேன், என்று ஒரு தந்தை சொல்வது போல் அமைகிறது.

திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி வரும் போது உள்ள அஷ்ட லிங்கத்தை வணங்கினால் ஏற்படும் பலன்கள்
இந்திரலிங்கம் : புதிய வேலை, பணி மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்
அக்னி லிங்கம் : கற்பு, சத்யம், தர்மம் தலை காக்கும்
எமலிங்கம் : எமபயம் நீங்கி, நீதி வழுவாமல் வாழலாம்
நிருதி லிங்கம் : தோஷங்கள், குழந்தை இல்லாமை, சாபங்கள் நிவர்த்தியாகும்
வருணலிங்கம் : ஜலதோஷம், சிறுநீரக வியாதி, சர்க்கரை வியாதி நீங்கும்
வாயு லிங்கம் : காசம், சுவாச நோய், மாரடைப்பு நோய் நீங்கும்
குரேப லிங்கம் : ஆக்கப்பூர்வமாக தரிசித்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.

சக்கரத்தாழ்வார்
எம்பெருமானின் நித்ய சூரிகளில் ஒருவரே சக்கரமாக மாறியுள்ளதால் சக்கரத்தாழ்வார் எனப்படுவார். பெருமாளுக்கு ஐந்து ஆயுதங்கள். சக்கரத்தாழ்வாருக்கு பதினாறு ஆயுதங்கள். சக்கரம், ஈட்டி, கத்தி, கோடரி, தண்டம், சதமுகாக்னி, மாவட்டி, சக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலக்கையிலும் சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, வஜ்ரம், சூலம், கதை ஆகிய எட்டு ஆயுதங்களை இடக்கையிலும் அணிந்திருப்பார்.

சொன்னது
1. கடவுள் மனிதனுக்குச் சொன்னது - கீதை
2. மனிதன் கடவுளுக்குச் சொன்னது - திருவாசகம்
3. மனிதன் மனிதனுக்குச் சொன்னது - திருக்குறள்
4. பகவத் கைங்கரியம் - இறைவனுக்குத் தொண்டு செய்தல்
5. பாகவத கைங்கரியம் - இறைவனுடைய அடியார்களுக்கு தொண்டு செய்தல்.

என்றும் சிரஞ்சீவி எனப் பெயர் பெற்றவர்கள்
அஸ்வத்தாமன், மஹாபலி, வியாசர், ஆஞ்சநேயர், விபீஷணன், கிருபாசார்யார், பரசுராமர்


காஞ்சி புராணம்,
காஞ்சி புராணப்படி காஞ்சி மாநகரத்தில் சிவனுக்கு 16,000 கோயிலும், விநாயகருக்கு 1,00,000 கோயிலும், காளிக்கு 5000 கோயிலும், விஷ்ணுவிற்கு 12,000 கோயிலும், முருகனுக்கு 6,000 கோயிலும், திருமகள், கலைமகளுக்கு 1000 கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது.

நவவித பக்தி என்னும் ஒன்பது பக்தி முறை
சரவணம் - இறைவனது பெருமைகளை, லீலைகளை காதால் பக்தியுடன் கேட்பது
கீர்த்தனம் - இறைவனின் புகழைப் பாடுதல்
ஸ்மரணம் - எப்பொழுதும் பரமனையே நினைத்து அவன் நாமத்தை ஜபித்தல்
பாதஸேவனம் - இறைவனுக்கு தொண்டு செய்தல்
அர்ச்சனம் - மலரால் அவன் பாதத்தில் அர்ச்சித்தல்
வந்தனம் - நமஸ்கரித்தல்
தாஸ்யம் - ஆண்டவன் ஒருவனுக்கே நாம் அடிமை என்று கருதி செய்யும் செயல்களையெல்லாம் அவனது மகிழ்ச்சிக்காக அர்ப்பணிதல்
ஸ்க்யம் - இறைவனை நண்பனென எண்ணி தோழமை பூண்டு வழங்குதல்
அத்மநிவேதனம் - தன்னை முழுவதும் இறைவனிடம் அர்ப்பணித்து அவனே அனைத்தும் என்று வாழும் இறைவன் அடியார் பணி செய்தல்

8 ன் சிறப்பு:
8 என்ற எண் நலன் பயக்கும் எண்ணே ஆகும்.
பகவான் கிருஷ்ணன் 8வது மகனாக அஷ்டமி திதியில் பிறந்தார்.
8வது அவதாரம் தான் கிருஷ்ணர் அவதாரம்.
மனிதனின் உயரம் அவரது கையால் 8 சாண் ஆகும்.
சூரிய கதிர் பூமியை அடைய 8 நிமிடம் ஆகிறது.
ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானமாகும்.
சிவனின் குணங்கள் 8 - எட்டு வீரச்செயல்கள் நடந்தன. 8 வீரட்டத் தலங்கள் ஆகும்.
முனிவர்கள் அடையும் சித்தி 8, ஐஸ்வரியம் 8, திசையும் 8, விக்ரகங்கட்கு சார்த்துவது அஷ்டபந்தனம் என்னும் 8 வகை மூலிகைகளால் ஆன மருந்து ஆகும்.
ஈஸ்வரன் என பின் பெயர் பட்டம் பெற்ற சனியின் ஆதிக்க எண் 8.

அஷ்டபந்தனம்
அஷ்டபந்தனம் என்பது கோயிலில் சுவாமி சிலைகளை பீடத்தில் பொருத்த பயன்படும் ஒரு கலவை ஆகும். இது மூன்று வகையாக உள்ளன.
1. ஏஜகபந்தனம் - என்பது வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்டவை
2. ஸ்வர்ணபந்தனம் - என்பது தங்கத்தால் செய்வது
3. அஷ்டபந்தனம் என்பது அரக்கு, சுக்காங்கல், குங்குலியம், ஜாதிலிங்கம், செம்பஞ்சு, வெண்ணை, மஞ்சள் மெழுகு, பச்சை கற்பூரம் ஆகியவற்றால் ஆனது.

16 செல்வங்கள்
பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும். வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டக்கூடிய கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச் சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல்.

அஷ்டமியின் சிறப்பு
பவுர்ணமி அல்லது அமாவாசையை அடுத்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதி. எட்டு என்ற எண் அனைவராலும் வெறுக்ககூடிய எண்ணாக இருந்து வந்தது. எனவே இந்த எண்ணுக்குரிய திதிக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. ஒரு முறை இந்த திதி தனது மனக்குறையை இறைவனிடம் முறையிட்டது. மனமிறங்கிய இறைவன் இந்த திதியின் குறை நீக்க அஷ்டமி திதியில் கண்ணனாக அவதாரம் செய்ததாகவும், சைவ சமயத்தில் பைரவர் இந்த திதியை தனக்குரிய பூஜை நாளாக ஏற்றுக்கொண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. எனவே இந்த திதியில் சுபநிகழ்ச்சிகள் ஏதும் நடப்பதில்லை என்ற குறை நீங்கியது. வட மாநிலங்களில் எல்லாம் அஷ்டமியன்று இறைவழிபாட்டை மிகச்சிறப்பாக செய்கின்றனர்.

மணிகளில் சிறந்த ருத்ராட்சம்
தேவிகளில் சிறந்தவள் கவுரி. கிரகங்களில் சூரியன். மாதங்களில் மார்கழி. மந்திரங்களில் காயத்ரி. நதிகளில் கங்கை. ரிஷிகளில் காசிபர். விருட்சங்களில் (மரம்) கற்பதரு. மலர்களில் பாரிஜாதம். பசுக்களில் காமதேனு. மணிகளில் சிறந்தது ருத்ராட்சம்.

ஜபத்தின் பலன்
பிறர் காதில் விழும்படி ஜபம் செய்வது வாசிகம் எனப்படும். இது ஒரு மடங்கு பலனைத்தரும். தனக்கு மட்டுமே கேட்கும்படி ஜபம் செய்வது உபாம்சு எனப்படும். இது நூறு மடங்கு பலனைத்தரும். மனதால் மட்டுமே ஜபிப்பது மானஸம் எனப்படும். இது ஆயிரம் மடங்கு பலனைத்தரும்.

Monday 30 January 2012

அம்மா என்றால் மட்டுமில்லை அன்பு ...................................


அம்மா என்றால் அன்பு..........!

கிருஷ்ண தேவராயரின் அவையில் அல்லசானி பெத்தண்ணா திம்மன்னான்னு ஒருத்தர் இருந்தார். பேரு ரொம்ப வித்தியாசமா இருந்ததுனாலே சின்ன வயசுல படிச்சாலும் இன்னும் ஞாபகத்துல இருக்கு. அந்த வகையில இன்னைக்கு நாம பார்க்கப் போகிற திம்மக்காவும் இனிமேல் மறக்க மாட்டோம். படிச்சுப் பாருங்க...கட்டுரை முடிவில மீண்டும் வருகிறேன்.......


==============================================


 

கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து தும்கூர் போகும் வழியில் 25 வது கிலோமீட்டரில் வருகிறது கூதூர் கிராமம். அதுவரை வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட பூமி குளிர்ந்து காணப்படுகிறது, அதற்கு காரணமான ஆயிரத்திற்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன, மொத்தத்தில் மரங்கள் அடர்ந்த அந்த திடீர் சோலைவனம் மனதை சிக்கென பறிக்கிறது.

எங்கும் இல்லாத அளவிற்கு, எங்கு இருந்து வந்தன இத்தனை ஆலமரங்கள், யார் கொண்டுவந்தது நட்டது, அதைவிட யார் இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது என்ற பல கேள்விக்கு எல்லாம் விடைதான் , எழுதப்படிக்கத்தெரியாத திம்மக்கா.யார் இந்த திம்மக்கா என்பதை அறிய சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும்.



சாதாரண கிராமத்து ஏழைப்பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர். சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 80 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.
பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும்,உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார்.

இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார்.
ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார்.

வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார்.

மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார்.

அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாராமல் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார். ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஓ ...வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதாஎன்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க...கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்என்று கூறியிருக்கிறார்.

இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது.
சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல.
இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து.

பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது.
என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம்.

எண்பது வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மாஎன பேசியபடியும் காணப்படுகின்றன.

நன்றி : திரு. எல். முருகராஜ் - தினமலருக்காக.
===============================================

 ஹா.... கண்கள் பனித்தன . இதயம் இனித்ததுன்னு டயலாக் ஞாபகத்துக்கு வரும்னு நினைக்கிறேன். எவ்வளவோ நாமளும், இந்த மாதிரி உருக்கமான கட்டுரைகளை படிச்சு இருப்போம். ஆனாலும், கொஞ்ச நாளில் இதையெல்லாம் மறந்துட்டு கால ஓட்டத்தில நாமளும் ஓடிக்கிட்டு இருப்போம்.

உன்னால் முடியும் தம்பி படம் வந்ததே, பாலச்சந்தர் சார் படம். அதுலயும் ஒரு பெரியவர் காரெக்டர் இதே மாதிரி வரும். அவர் இதே மாதிரி நிறைய மரம் வளர்த்து , யாரோ ஒரு மரத்தை வெட்டினதுக்கு உயிரையே விடுற மாதிரி , ரொம்ப உருக்கமா ஒரு காட்சி உண்டு.

இந்த உலகம் உயிர்ப்போட இன்னும் சுத்திக்கிட்டு இருக்கிறதுக்கு இந்த மாதிரி சில நல்ல உள்ளங்கள் தான் காரணமோன்னு தோணுது.

நம்ம வாசகர்கள் என்ன பண்ணலாம்?

பீல் பண்ணுறதோட நிறுத்தாம, ஒவ்வொருத்தரும் ஒரு பத்து மரமாவது நட்டு வளர்க்கலாம். காடுகளை அழிக்க ஆரம்பிச்சுதுல, பருவ காலத்தையே வெற்றிகரமா மாத்திப்புட்டோம். இப்படியே போனாஇன்னும் அம்பது வருஷம் கழிச்சு , நம்ம ஊர்ல கூட வெயில் அம்பது டிகிரியை தொட்டுடும். நம்ம பேரக்குழந்தைங்க நிலைமை?

சாலைகளை அகலப்படுத்துறோம்னு , சாலை ஓரம் இருந்த மரங்களை எல்லாம் வெட்டி, அதை கூறு போட்டு வித்தாச்சு , எரிச்சாச்சு நம்ம அண்ணாச்சிங்க எல்லாம். அவனை நிறுத்த சொல், நானும் நிறுத்துறேன் எல்லாம் , நாயகன் படத்தோட போகட்டும்.

எல்லாம் அரசாங்கம் பண்ணட்டும்னு ஒதுங்கி போகவேண்டாம்.

நாம வாழ்ந்திட்டுப் போனதுக்கு , அத்தாட்சியா , ஒரு சாதனையா - பத்து நிழல் தரும் மரமாவது நாம வளர்ப்போம். நீங்க இருக்கிற வீட்டுக்கு பக்கமாகவோ, இல்லை உங்க ஊர் சாலை ஓரமாகவோ, ஊர் பொது இடங்களிலோ, கோவிலிலோ , உங்க வசதியை பொறுத்து இருக்கட்டும்.

யார் எல்லாம் சொந்த வீடு கட்டி இருக்கிறீங்களோ, அவங்க எல்லாம் சாக்கு போக்கு சொல்லாம அவசியம் செய்யுங்க. உங்க வீட்டுக்கே , ஒரு மரம் வெட்டப்பட்டு இருக்கும்.

யார், யாருக்கு வீடு கட்ட ஆசை இருக்கோ, அவங்களும் நிச்சயம் செய்யுங்கள். இயற்கை உங்களுக்கு கருணை செய்யும். உங்களுக்கு நிச்சயம் சொந்த வீடு அமையும். உங்கள் குழந்தைகளுக்கு இந்த நல்ல விஷயத்தை கற்றுக்கொடுங்கள்.  குட்டிப்பையன், சின்ன சொம்புல தண்ணி கொண்டு வந்தா, நீங்க உற்சாகமா ஒரு குடம் தண்ணி சுமக்கலாம்.

இதை எல்லாத்தையும் விட ஒரு முக்கிய விஷயம். இந்த கட்டுரை படிக்கும்போதே நீங்களும் உணர்ந்து இருக்கலாம்.

புத்திர சோகம். உறவுகள் கூட நேசம் செலுத்தாமல் இருக்கும்  நிலை.

நமக்கு கடவுளா இருந்து நம்மளை சின்ன வயசுல கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றிய , நம் பெற்றோர்களை நேசிப்போம். எவ்வளவோ மனஸ்தாபம் ஏற்பட்டு , விரிசல் விட்ட உறவுகளை நேசிப்போம்......!


சந்தர்ப்ப சூழ்நிலைலே யார் யார் கிட்டேயோ ஏச்சு பேச்சு வாங்கி இருப்போம்.
எங்கேயோ இருந்து வந்த நம்ம உயர் அதிகாரிகள் எவ்வளவோ நம்மளை பேசி இருந்தாலும் பொறுத்து போறோம் இல்லையா? நம்ம அண்ணன் , தம்பி - சித்தப்பா மக்க, பெரியப்பா மக்க - ஏதோ அந்த சூழ்நிலை, சந்தர்ப்பம் , பொல்லாத நேரம் , எவ்வளவோ பேசி இருக்க கூடும்...... அதை மனசில வைச்சு, அவங்க கூடி பேசி கலக்காமஎவ்வளவு நாள் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறோம்....!

கழுதை போயிட்டுப் போகுது... விடுங்க சார்....! நாம இ(ர)றங்கி வந்து கை குலுக்குறதுல தப்பே இல்லை... என்ன திடீர்னு அவங்க முதல்ல யோசிக்கலாம். நாளைக்கு அவங்களே நம்ம நல்ல மனசை புரிஞ்சுக்கிட்டு ஒன்னு மண்ணா ஆகிடுவாங்க.

நாளைக்கு நாம இருப்போமான்னு , யாருக்கு தெரியும்....! இருக்கிறவரை நேசிப்போம்... இயற்கையை நேசிப்போம்...! கடைலே சரக்கு வாங்க்கிட்டு ஒரு பிளாஸ்டிக் கேரி பாக் வாங்காம , கையிலே சுமந்துக்கிட்டு போனா, நீங்க ஒரு மரத்தை வளர்த்ததுக்கு சமம். நீங்க தூக்கிப் போடப்போற அந்த பை , ஒரு மரத்தை வளர விடாம தடுக்குதாம்....!

அரசாங்கம் திம்மக்காவுக்கு மாசம் ஐநூறு ரூபாய் தான் கொடுக்குதாம்..! என்ன கொடுமை இது சரவணானு  கேட்குறீங்களா?


இந்த அளவுக்காவது நம்ம அரசாங்கம் இருக்குதேன்னு நினைச்சிக்கோங்க....
சுதந்திரம் வாங்குன புதுசுல, நம்ம நாட்டை பத்தி யோசிக்க ஆளுங்க இருந்தாங்க... இப்போ நாம வளரும் வல்லரசாமே ... இப்போ எப்படி நாட்டை பத்தி யோசிக்க..? நாடு வளர்ந்துருச்சு....நாம வளருவோம்..! நல்லா சம்பாதிப்போம்...! நம்மளை பத்தி யோசிப்போம்.... நாம சந்தோசமா இருப்போம்... இப்படித்தான் நாம தேர்ந்தெடுக்கிற தலைவர்கள் இருக்கிறாங்க...!

நாம எங்கே இருக்கிறோம்...? தேடுவோம்... முதல்ல நாம யாரு? எதுக்கு வந்து இருக்கிறோம் னு உணருவோம்...!

ஒரு மரம் கூட நூறு பேருக்கு உதவுது சார்...! ஒரு பசு மாடு எவ்வளோ பேருக்கு பால் கொடுக்குது. நாம வெறுமனே நம்ம குடும்பத்தை மட்டும் பார்த்துக்கிட்டு சாம்பல் ஆகவா, மண்ணோட மக்கிப் போகவா இறைவன் அனுப்பிச்சு இருக்கார்..? நம்ம கடமை என்ன? கண்டுபிடிப்போம்...... அட்லீஸ்ட் இந்த ஜென்மத்திலாவது....

வெறும் கிரிக்கெட்டும், சினிமாவும், நாலு விஷயம் தெரிஞ்ச மாதிரி கித்தாப்ப்பா பேசுறதும்நம்ம வாழ்க்கை இல்லை.  அதை தாண்டி ஒரு அபூர்வ வரம் நம்ம வாழ்க்கை. நம்ம அப்பா , அம்மா ஒரு நிமிஷம் யோசிச்சு இருந்தா நம்ம பிறப்பு இல்லை. பிறந்தபிறகும், அவங்க பாட்டுக்கு நம்மளை கண்டுக்காம இருந்து இருந்தா பசியிலே செத்துப் போயிருந்து இருப்போம். சுத்தி இருக்கிற நம்ம சமூகம், யுத்த பூமியா இருந்து இருந்தா, நம்மளையும் விதைச்சு இருந்து இருப்பாங்க.... போதும், போதும், நீ அங்க ஆத்துன கடமைன்னு அந்த இறைவன் நினைச்சு இருந்தா... நாமளும் காகமா இருந்து நம்ம புள்ளைங்க சாப்பாடு போடாதான்னு கா.. கான்னு கத்திக்கிடுத் தான் இருக்கணும்.... நமது ஒவ்வொரு நாள் வாழ்க்கையும், அவன் நமக்கு இட்ட வரம்.... அர்த்தத்துடன் வாழ்வோம்.....!

Survival  of  the  fittest ....... நாம் சாதிக்க பிறந்தவர்கள் , நிச்சயம் சாதிப்போம்..... தலைமுறை தலைமுறை தாண்டி நம் வாழ்வு ஒரு வரலாறாக நிலைக்க வேண்டும்.....!


சார், என்ன மரம் வளர்க்கலாம்.....? வேம்பு - கருணை பெருகும். உடல் ஆரோக்கியம் வளர்க்கும். புளிய மரம் - செல்வம் பெருகும். ஆல மரம் புகழ் வளரும். அரசமரம் உங்களை ஆள வைக்கும். வாழை உங்கள் சந்ததியை மகிழ்ச்சியில் வைக்கும். துளசி செடி உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைக்க வைக்கும். மா , பலா , பூச் செடிகள்  உங்கள் குடும்ப ஒற்றுமையை நிலைக்க செய்யும். இதைவிட முக்கியம். நமக்கு அளவான, ஆரோக்கியமான உணவு அவசியம். நம் உடல் வளர்க்க. கொஞ்ச நேரமாவது உடல் பயிற்சி, நம்ம வாடகை எடுத்துக்கிட்டு இருக்கிற இந்த உடம்புல உசிரு நிக்க.


நம்ம தாத்தா பாட்டி எல்லாம் ஒழுங்கா செஞ்சாங்க.... நாமதான் கண்டுக்காமே விட்டுட்டோம்...... !


நண்பர்களோட ஒரு பியர் அடிக்குற நேரத்துக்கு, நாம நம்ம லைப் பத்தி யோசிச்சா , நம்ம வாழ்க்கை மேல ஒரு காதல் வரும். ....


போதைல இருக்கிற காலமும், குழந்தைப் பருவமும் ஒன்னு. நாம எல்லாருக்கும் காட்சிப்பொருள்....நாம மத்தவங்களை சந்தோசப்படுத்துவோம். அழவைப்போம். அழுவோம். கவுந்து தூங்குவோம்... நமக்குத்தான் உணர முடியாது. இப்படியே சின்னப் புள்ளைத்தனமா எம்புட்டு காலம் வளர்றது?


எல்லா நேரத்திலேயும், நாம எக்கேடு கேட்டு கிடந்தாலும், நம்மளை நேசிக்கிற ஒரு ஜீவன் அன்னை. எல்லோருக்கும் அந்த அன்னை அரவணைப்பு கிடைக்குமா? சந்தேகம் தான்... ஒன்னும் பிரச்னை இல்லை... நாமே அன்னை ஆகிவிடுவோம்...! நேசமும், பாசமும் நம் கண்களிலும் வழியட்டும்....! அடிமனதில் இருந்து தொடங்கி இதழ்களில் தெரியட்டும், நம் புன்னகையும், இன்சொல்லும்.



கட்டுரையை படித்த பிறகு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் தன்யனாவேன். மற்றவர்களுக்கு பரப்புங்கள் என்கிற வேண்டுகோள் இல்லை. உங்கள் உள்ளே புகுந்து ஒரு விதையை தூவ முயற்சித்த பிரயாசை இந்த கட்டுரை...!